கடந்த ஆண்டு வந்ததிலேயே லூசுத்தனமான படம் பெற்ற அப்பாவே பிள்ளையைப் பலி கொடுக்கும் லியோ. இந்த ஆண்டு வந்ததிலேயே லூசுத்தனமான படம் ராயன்.
ஒரு ஊரிலே காத்தவராயன், மாணிக்க ராயன், முத்துவேல் ராயன் என்று மூன்று ராயன்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களின் ஒரே தங்கை துர்கா. அனாதைகளான இவர்களின் உயிருக்கு ஆபத்து வரும் போது ஒரு கொலை செய்து விட்டு ஊரை விட்டு ஓடி வந்து எல்லோரையும் வளர்த்து ஆளாக்குகிறார் மூத்த அண்ணன் ராயன்.
ராயன் வாழும் பகுதியில் உள்ள இரண்டு ரவுடிக் கும்பலுக்கு இடையே நடக்கும் மோதலில் ஏற்படும் குழப்பத்தில் ராயனின் உருப்படாத தம்பி நெம்பர் 1 மாட்டிக் கொள்கிறார்.
அந்தத் தம்பியைக் காப்பாற்ற அண்ணன், தம்பிகள் மூவரும் இணைந்து ரவுடிக் கும்பல் 1 ஐப் போட்டுத் தள்ளுகிறார்கள். எதிரி ஒழிந்தான் என்று நிம்மதியாக இருக்க அறிவில்லாத ரவுடி நம்பர் 2, ராயன் இருந்தால் தனக்கு ஆபத்து என்று அவரைப் போட்டுத் தள்ள முயல்கிறார். ஆகவே, தங்கையின் திருமணத்துக்கு முன்பு ரவுடி நம்பர் 2வையும் போட்டு விடுவோம் என்று களமிறங்கும் ராயனுக்குத் திடீர் அதிர்ச்சி.
ரவுடி நம்பர் 2 உடன் இணைந்த அவரது இரண்டு தம்பிகளே அவரைக் குத்தி விடுகிறார்கள். இவ்வளவு செய்தும் பார்வையாளர்களுக்கு உணர்ச்சிகள் வராவிட்டால் என்ன செய்வது என்று, அந்தக் கும்பல் அவர்கள் தங்கையையும் வல்லுறவு கொள்கிறது.
ஆகவே, நடு அண்ணன், சின்ன அண்ணன் ஆகிய இருவரையும் பழி வாங்க பெரிய அண்ணனோடு இணைந்து தங்கை எடுக்கும் துர்கை அவதாரம் தான் climax.
இத்தனைப் பேரைக் கொன்ற தனுஷைப் போட்டுத் தள்ளலாம் என்று காவல் துறை காத்திருக்கிறது. அவர் மீண்டும் இன்னொரு ஊருக்குத் தங்கையுடன் சேர்ந்து தப்பியோடி இரண்டாம் பாகத்திற்கு lead கொடுக்கிறார்.
நாம் தான் செத்து சுண்ணாம்பாக வீடு திரும்புகிறோம்.
வழக்கமாக, படம் பார்த்து விமர்சனம் எழுதும் போது கதையைச் சொல்லக் கூடாது என்பார்கள். ஆனால், நான் பட்ட துயரத்தை நீங்கள் படக்கூடாது என்பதற்காக ஒரு பெரிய அண்ணனாக இருந்து உங்களைக் காப்பாற்றும் நோக்கத்திலேயே இவ்வளவு விரிவாக எழுதி இருக்கிறேன்.
நன்றி. வணக்கம்.

No comments:
Post a Comment